தேவை ரோடு, வாறுகால், சமுதாய கூடம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விடுபட்ட பகுதிகளில் ரோடு, வாறுகால், தெரு விளக்கு வசதிகள், பொது பயன்பாட்டிற்கு சமுதாயக்கூடம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்துார் தன்யா நகர் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து குடியிருப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ராமானுஜம், பாலகிருஷ்ணன், மாரியப்பன், கரியமால், வீணா, சரஸ்வதி கூறியதாவது; ஸ்ரீவில்லிபுத்துார் தன்யா நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். தற்போது 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆண்டுக்காண்டு வீடுகள் அதிகரித்து வருகிறது.

இதில் நகரின் நுழைவுப் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் வாறுகால், பேவர் ப்ளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய குடியிருப்பு பகுதிகளில் ரோடு, வாறுகால் வசதி இல்லை. மழை காலங்களில் சிரமம் ஏற்படுகிறது.

குறிப்பாக சாய்பாபா கோவில் தெரு மண் ரோடாக காணப்படுவதால் மழை பெய்தால் சகதி ஏற்படுகிறது. எனவே, இங்கு உடனடியாக ரோடு, வாறுகால் வசதி செய்து தர வேண்டும். நகரின் விடுபட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும். பாரதி நகர் இரண்டாவது, மூன்றாவது தெருக்களில் வாறுகால் வசதி செய்து தர வேண்டும்.

இப்பகுதி மக்களின் நலனுக்காக பொது பயன்பாட்டிற்கு சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும். பழுதடைந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளை சீரமைத்து தர வேண்டும். இப்பகுதி முழுவதும் வாறுகால் கழிவு நீர் வெளியேற வழி ஏற்படுத்தி தர வேண்டும். தெருக்களில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும். இப்பகுதிக்கான தனியாக ஒரு மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டி தர வேண்டும். விளைநிலங்களை ஒட்டிய பகுதிகளில் விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது., என்றனர்.

Advertisement