இஸ்ரேல்-ஈரான் மோதல்: ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்கள் மூடியது அமெரிக்கா

1


ஜெருசலேம்: இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்ததால், ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூன்று நாட்களுக்கு மூடியது.


இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. ராணுவ தளங்கள் தொடங்கி, பல முக்கிய உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்குள், ஈரான், இஸ்ரேலை நோக்கி குறைந்தது 30 ஏவுகணைகளை ஏவி, டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளைத் தாக்கியது. இந்தத் தாக்குதலின் விளைவாக கடலோர, தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பல தீ விபத்துகள் ஏற்பட்டதாக இஸ்ரேலின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் தெரிவித்தன.



இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூன்று நாட்களுக்கு மூடியது. ஏற்கனவே டெல் அவில் நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது.

இதற்கிடையே, அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், மோதல், மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

Advertisement