காட்சிப் பொருளான ரேஷன் கடை  விரைவில் திறக்க எதிர்பார்ப்பு

திட்டக்குடி: எரப்பாவூரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன்கடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ரேஷன் கடையை பயன்படுத்தி கிராம மக்கள் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வாங்கி வாங்கினர். ஆனால் போதிய பராமரிப்பின்றி உள்ள கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, மழைநீர் உள்ளே கசிந்து ரேஷன் பொருட்கள் சேதமடைந்தது.

தொடர்ந்து, அருகிலுள்ள சேவை மையத்திற்கு ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, கடந்தாண்டு எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டும் பணி துவங்கியது.

கட்டுமான பணிகள் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுநாள் வரை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளதால் அரசு நிதி வீணாகிறது. இதனால் சேவை மைய கட்டடத்தில் நெருக்கடிக்கு மத்தியில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, புதிய ரேஷன் கடையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement