டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

5


மதுரை: கடந்த 5 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு, மது போதை மறுவாழ்வு மையங்கள் எத்தனை செயல்படுகின்றன போன்ற விபரங்களை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மதுரை நிலையூர் மேகலா தாக்கல் செய்த பொதுநல மனு: வடிவேல்கரையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிலையூருக்கு மாற்றம் செய்ய உள்ளனர். அருகில் குடியிருப்புகள், பள்ளி அமைந்துள்ளது. மது அருந்துவோரால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கடையை நிலையூருக்கு மாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: ஆண்டுதோறும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு தெரிவித்தது. குறிப்பிட்ட பகுதியில் மது விற்பனை குறைந்ததும் வேறு இடத்திற்கு டாஸ்மாக் கடை மாற்றம் செய்யப்படுகிறது. மக்கள் நல அரசு என்பது வெறும் வார்த்தை அல்லது கொள்கை அளவில் மட்டும்தானா, ரேஷன் கடைகள் சில கி.மீ.,துாரத்தில் அமைந்துள்ளன.



அதை தேடி கண்டுபிடித்து பொருட்கள் வாங்கச் சென்றால் நீங்கள் வசிக்கும் பகுதி இக்கடையின் அதிகார வரம்பிற்குள் வராது என்கிறார்கள். தெருக்கள் தோறும் டீக்கடைகள் உள்ளன. அதுபோல் நினைத்த நேரம் மது அருந்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் அருகருகே துவக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.


பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு, மது போதை மறு வாழ்வு மையங்கள் எத்தனை செயல்படுகின்றன போன்ற விபரங்களை தமிழக அரசு தரப்பில் ஜூன் 23ல் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பிறப்பித்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் அரசப்பன், ''தஞ்சாவூர் எம்.கே.எம். ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அருகே கோயில் உள்ளது. டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்,'' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அரசு தரப்பு: டாஸ்மாக் அமைந்துள்ளதில் விதிமீறல் இல்லை. இடையூறு இல்லை.

மனுதாரர் தரப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூன் 15, 16ல் தஞ்சாவூர் வந்தபோது எம்.கே.எம். ரோடு டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது.



நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: எப்போது வி.ஐ.பி.,கள் வந்தாலும் இப்பகுதி டாஸ்மாக் கடை மூடப்படுமா, ஜூன் 15, 16ல் எதற்காக அக்கடை மூடப்பட்டது என்பது குறித்து தஞ்சாவூர் எஸ்.பி., ஜூன் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement