பாலி அருகே 10 கி.மீ. உயரம் எழுந்த எரிமலை குழம்பின் புகை; டில்லிக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்

புதுடில்லி: எரிமலை வெடித்துச் சிதறியதால் பாதுகாப்பு கருதி பாலிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் தலைநகர் டில்லிக்கே திருப்பி விடப்பட்டது.



புதுடில்லியில் இருந்து இந்தோனேஷியாவின் பாலிக்கு ஏர் இந்தியா விமானம் AI 2145 இன்று புறப்பட்டுச் சென்றது. பாலி விமான நிலையத்தை விமானம் நெருங்கியது. அப்போது அங்குள்ள சுற்றுலா தீவான புளோரசில் உள்ள மவுண்ட் வெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை வெடித்தது. இதனால் 10 கி.மீ., உயரத்துக்கு புகை எழுந்தது.


இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக ஏர் இந்தியா விமானத்தை பாலி விமான நிலைய அதிகாரிகள் தரையிறங்க அனுமதிக்கவில்லை. மீண்டும் டில்லிக்கே திரும்பிவிடுமாறு விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


இதையடுத்து, பாலியில் இருந்து விமானம் டில்லிக்கு திரும்பியதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விமான நிறுவனம் கூறி உள்ளதாவது;


பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. பயணிகள் விரும்பினால் அவர்களின் பயணக்கட்டணம் திருப்பி தரப்படும். பயணிக்க விரும்புவோருக்கு மீண்டும் பயணத்திட்டம் தயாரானவுடன் உரிய முறையில் தெரிவிக்கப்படும்.


இவ்வாறு ஏர் இந்தியா நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.


ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதுபோன்றே, நியூசிலாந்து, சீனா நாடுகளில் இருந்து பாலிக்கு இயக்கப்படும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement