ரூ.3 ஆயிரத்திற்கு கார்களுக்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்; ஆகஸ்ட் 15ம் தேதி முதல் புதிய அறிமுகம்

11


புதுடில்லி: ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ரூ.3 ஆயிரத்திற்கு கார்களுக்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.



இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் செலுத்தி பாஸ் பெற்றுக்கொண்டால், நாடு முழுவதும் ஓராண்டு அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் திட்டம் ஆக., 15ம் தேதி முதல் அமலாகிறது. வணிக வாகனங்கள் அல்லாத தனி நபர் வாகனங்களுக்கு, இந்த பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.


கார்,ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பாஸ் பொருந்தும். 60 கி.மீ.,க்குள் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. வருடாந்திர பாஸ் திட்டம், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும்.


போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் உள்ள தகராறுகளை நீக்குவதன் மூலமும் கோடிக்கணக்கான தனியார் வாகன டிரைவர்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Advertisement