இஸ்ரேல் - ஈரான் இடையே தொடரும் குண்டுமழை; இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலி

8

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் நாடுகள் குண்டுகளை வீசி பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுவரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.


ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.


6வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி, ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.


இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்கா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. போரை நிறுத்துமாறு பல உலக நாடுகள் அறிவுறுத்தி வரும் நிலையிலும், இருநாடுகள் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.


இஸ்ரேலில் உள்ள டெல்அவிவ் நகரில் 400 ஏவுகணைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்களைக் கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மீது Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 2024ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது முதல்முறையாக இந்தப் போரில் Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது.


இஸ்ரேல் முழுவதும் 40 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்காரணமாக 19,000க்கும் மேற்பட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும், 3,800 மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பதிலுக்கு டெஹ்ரான் மீது இஸ்ரேலும் தாக்குதலை நடத்தி வருகிறது.


இதுவரையில் நடந்த தாக்குதல்களில் ஈரானில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். 1,326 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல, இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 1,300 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisement