பலமான பவுலிங் கூட்டணி * முன்னாள் பயிற்சியாளர் பாரத் அருண் கணிப்பு

புதுடில்லி: ''இந்தியாவின் பவுலிங் கூட்டணி பலமாக உள்ளது. திட்டமிட்டு செயல்பட்டால் சாதிக்க முடியும்,'' என பாரத் அருண் தெரிவித்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இப்போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் டென் சானல்களில் காணலாம். இதுகுறித்து இந்திய அணி முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் அளித்த பேட்டி:
* பும்ரா உடற்தகுதி பெரிய பிரச்னையாக உள்ளது. இவர் இல்லாமல் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமா?
பும்ரா அணிக்கு தேவை தான். அதேநேரம், மற்ற பவுலர்களுக்கும் சிறப்பாக செயல்படும் தகுதி உள்ளது. சிராஜ் அனுபவம் அதிகரித்துள்ளது. அர்ஷ்தீப், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா தேறியுள்ளனர். இவர்களுடன் 2 'ஆல் ரவுண்டர்', 3 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இங்கிலாந்து சூழலை சரியாக புரிந்து கொண்டு, திட்டமிட்டு செயல்பட்டால் இந்திய சாதிக்கலாம்.
* ஒருவேளை பும்ரா விளையாடவில்லை எனில், சிராஜுக்கு என்ன 'அட்வைஸ்' தருவீர்கள்?
இங்கிலாந்தில் அடிக்கடி சூழ்நிலை மாறிக் கொண்டே இருக்கும். இதற்கேற்ப தங்களை எப்படி மாற்றிக் கொள்கிறோம் என்பதில் தான் வெற்றி உள்ளது. பும்ரா தொடர் முழுவதும் விளையாட வேண்டும் என்றால், மற்ற பவுலர்கள் பணிச்சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.
* அஷ்வின் ஓய்வு காரணமாக சுழற்பந்து வீச்சில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதா?
இந்தியாவின் ஜாம்பவான் பவுலர் அஷ்வின். இவரது இடத்தை நிரப்புவது கடினம். இருப்பினும் குல்தீப் சிறப்பான பார்மில் உள்ளார். இங்கிலாந்தில் ஜடேஜா அனுபவம் அதிகம். இவை இரண்டும் சேரும் பட்சத்தில் சிறப்பாக செயல்படலாம்.
* கோலி, ரோகித் ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன்-சுதர்சன் என இளம் வீரர்கள், இங்கிலாந்தின் அனுபவ பவுலிங்கை சமாளிக்க முடியுமா?
இது எப்போதும் சவாலானது தான். ஆனால் சுப்மன், ரிஷாப், கவுன்டி போட்டியில் விளையாடிய சாய் சுதர்சனுக்கு எதிரணி பவுலிங்கை தாக்குப்பிடிக்கும் திறன் உள்ளது. அனுபவ ராகுல் பொறுப்பாக செயல்பட வேண்டும்.

Advertisement