எப்போ ரோடு போடுவீங்க ஆபீசர்ஸ்? 4 ஆண்டாக வாகன ஓட்டிகள் ஏக்கம் 300 பேர் காயம்; 4 பேர் பலியான அவலம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ரயில் நிலையம் -- சின்னம்மாபேட்டை வரையிலான சாலை, 4 கி.மீ., துாரம் உடையது.
இச்சாலை வழியாக, தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் திருவள்ளூர், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக மணவூர் ரயில் டிக்கெட் கவுன்டரில் இருந்து, தொழுதாவூர் வரையிலான 3 கி.மீ., சாலை மிகவும் சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது.
சேதமடைந்த சாலையால், நான்கு ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நான்கு பேர் உயிரிழந்து உள்ளனர்.
இச்சாலை வழியாக தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகம் சென்று வருகின்றன.
சேதமடைந்த சாலையில் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக சாலை படுமோசமாக உள்ளதாகவும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால், பகுதிமக்கள் விரக்தியில் உள்ளனர்.
எனவே, வாகன ஓட்டிகள் சென்றுவர லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.