தண்ணீரை வீணாக்க மாட்டோம் என உறுதிமொழி 5.33 லட்சம் பேர் பங்கேற்று 'கின்னஸ்' சாதனை

பெங்களூரு: பெங்களூரில் கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கமே. இதை தீர்க்க, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இவ்வகையில், தண்ணீரை மக்கள் வீணாக்காமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம், கடந்த மார்ச் 21 முதல் 28ம் தேதி வரை நடத்தப்பட்டது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள் என, மொத்தம் 5,33,642 பேர், 'தண்ணீரை வீணாக்க மாட்டோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, பெங்களூரில் நேற்று நடந்தது. கின்னஸ் சாதனை நடுவர் ஸ்வப்நில் தங்கரிகர் வழங்கிய சான்றிதழை பெற்றுக் கொண்ட பின், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
பெங்களூரில் 2 கோடி பேருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை கொண்டு வர முயற்சிகள் செய்து வருகிறோம். ராம்பிரசாத் மனோகர் தலைமையில், குடிநீர் வாரியம் புதுமையான திட்டங்களை செய்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால், வாரியத்துக்கு ஆண்டுதோறும் 400 முதல் 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
இதுவரை 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள 35 சதவீத மக்கள் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதில்லை.
வாரியத்தின் ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர். காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டம், பல தடைகளை தாண்டி செயல்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி ஆரத்தியின் நன்மைகள் குறித்து விவசாய சங்கங்களுக்கு தெரியாது.
கே.எஸ்.ஆர்., அணையில் காவிரி ஆரத்தி நடத்த வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆரத்தி குறித்த சந்தேகங்களை தீர்க்க, அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன். தண்ணீருக்கு ஜாதி, மதம், மொழி இல்லை. அனைவருக்கும் தண்ணீர் அவசியமானது.
இந்த தண்ணீருக்காக, நல்ல மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதில் என்ன தவறு உள்ளது? காவிரி நிரம்பி வழியவில்லை என்றால், பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'தண்ணீரை சேமி; பெங்களூரை ஒளிர செய்'
பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியத்தலைவர் ராம்பிரசாத் மனோகர் பேசுகையில், ''துணை முதல்வர் சிவகுமார் உலக நீர் தினத்தை சிறப்பாக கொண்டாட, காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த சூழலில், 'தண்ணீரை சேமி, பெங்களூரை ஒளிர செய்' என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, மக்களிடம் உறுதிமொழி எடுக்க செய்தோம்.
''ஒரு வாரமாக வீடு, வீடாக சென்று வாரிய ஊழியர்கள், நீரின் முக்கியத்துவத்தை கூறி உறுதிமொழி எடுக்க செய்தனர். இப்படி, ஒரே வாரத்தில் 5,33,642 பேரை உறுதிமொழி எடுக்க செய்தோம். இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்று, பெங்களூரு குடிநீர் வாரியத்தின் பெயர் உலக அளவிற்கு பிரபலம் அடைய செய்துள்ளது,'' என்றார்.
மேலும்
-
குஜராத்தில் கனமழை, வெள்ளம்; 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
-
பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
-
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
-
ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்
-
உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!