மாணவர்களின் அடிப்படை கற்றல் மேம்பாட்டுக்கு கோவையில் பயிற்சி

கோவை, : புதிய கல்வியாண்டு துவங்கி, இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், கோவையில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கான, ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கான, பயிற்சி முகாம் நடைபெற்றது.

2025-26 கல்வியாண்டின் முதல் பருவத்திற்கான பயிற்சி, ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடைபெற்றது.

இரண்டு கருத்தாளர்கள் உட்பட, மொத்தம் 22 பேர் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பில், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில், மாணவர்களின் கற்றல் நிலை மற்றும் அடைவுத் திறனை மேம்படுத்துவது குறித்து, விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை நகர், எஸ்.எஸ்.குளம், பேரூர் உள்ளிட்ட 15 வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் 598, தன்னார்வலர்களுக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: தற்போது கோவை மாவட்டத்தில் 838 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் தினமும் மாலை 5:00 முதல் 7:00 மணி வரை மாணவர்களுக்கு, அடிப்படை கல்வி திறன்களை அதிகரிக்க பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள பயிற்றுனர்கள், வரும் 25க்குள் அனைத்து வட்டார வள மையங்களிலும் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement