சாலையை சீரமைக்கக் கோரி அ.தி.மு.க., பா.ஜ., போராட்டம்

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரி, அ.தி.மு.க., பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.

துடியலூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட, 1வது வார்டு விஸ்வநாதபுரம், வி.பி.வி., நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல், அந்த சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. இதனால் பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில், விஸ்வநாதபுரம், வி.பி.வி., நகர் பகுதியில் அ.தி.மு.க., 1வது வார்டு செயலாளர் சாந்தி பூஷன், பா.ஜ., நீலகிரி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க., பா.ஜ., கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், மாநகராட்சி வடக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பாதாள சாக்கடை உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், பேச்சு நடத்தி, சாலை உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement