'தழை'யை மதிப்பு கூட்ட வழிகாட்டுதல் தேவை

உடுமலை : கொத்தமல்லி தழையை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய அரசு உதவ வேண்டும் என உடுமலை வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, கொத்தமல்லி தழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், இச்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

குறைந்த தண்ணீர், செலவு பிடிப்பதால், ஆண்டு முழுவதும் விதைப்பு செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலான மாதங்களில், தழைக்கு போதிய விலை கிடைப்பதில்லை.

அறுவடைக்கு கூட கட்டுபடியாகாத விலை இருப்பதால், விவசாயிகள் 60 நாட்களுக்கு மேல் பராமரித்த செடிகளை அப்படியே உழவு ஓட்டி அழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தொடர் நஷ்டமும் ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வாக கொத்தமல்லி தழையை மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இதனால், விலை சரியும் போதும், எவ்வித நஷ்டமும் ஏற்படாது.

இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு வட்டார விவசாயிகளும்வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement