விதிமீறல் வாகனங்கள்; குறையாத நெரிசல் தளி ரோட்டில் தத்தளிப்பு

உடுமலை : தளி ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, விதிமீறல் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் தளி ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமிருக்கும்.

மூணாறு, மறையூர், திருமூர்த்திமலை, அமராவதி நகர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் இவ்வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ரோட்டில், இருபுறங்களிலும், தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக குட்டைத்திடலில், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

'நோ பார்க்கிங்' பகுதிகள் வரையறை செய்யப்பட்டு, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாகனங்கள் அப்பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது.

இதனால், காலை, மாலை நேரங்களில் தளி ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. தானியங்கி சிக்னல் பகுதியில் இருந்து போக்குவரத்து போலீசார், தளி ரோடு நெரிசலை கண்காணித்தாலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

இப்பிரச்னைக்கு தீர்வாக, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே, தளி ரோடு நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

Advertisement