உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்

புதுடில்லி: 274 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியாவின் போயிங் விமானம் 787-8 ட்ரீம்லைனர், புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 274 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணத்தை டாடா குழுமம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்யப்பட்டு, அவரவர் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து மத்திய அரசின் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; இந்த கடினமான தருணத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதலளிக்க சொல்ல வார்த்தைகள் இல்லை. டாடா குழுமத்தின் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். இந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய, விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும். விமான விபத்துக்குள்ளான பிறகு, மனித தவறுகள், விமானத்தின் இன்ஜின், பராமரிப்பு குறித்த ஊகங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், இந்த விமானம் குறித்து எனக்கு தெரிந்த தகவல் என்னவென்றால், வலதுபுற இன்ஜின் கடந்த மார்ச் மாதம் தான் புதிதாக பொறுத்தப்பட்டுள்ளது. இடதுபுற இன்ஜின் 2023ல் கடைசியாக சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் அடுத்த சர்வீஸ் செய்யப்பட உள்ளது. எனவே, இரு இன்ஜின்களும் சிறப்பாகவே இருந்துள்ளன.
அதேபோல, கேப்டன் சபர்வால் 11,500 மணிநேரமும், சக விமானி குந்தர் 3,400க்கும் கூடுதலான மணிநேரமும் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் இருவரும் சிறப்பான விமானிகள் என்று சக விமானிகள் மூலம் அறிந்துள்ளேன். எனவே, உடனடியாக எந்த முடிவுக்கு நாம் வர முடியாது. பிளாக் பாக்ஸ் மற்றும் பதிவான தரவுகளின் அடிப்படையில் தான் நாம் ஒரு முடிவுக்கும் வர முடியும். எனவே, அதுவரையில் காத்திருப்போம்.
பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால், விமானத்தை பறப்பதற்கு விமானப் போக்குவரத்துத்துறை அனுமதிக்காது, இவ்வாறு கூறினார்.

மேலும்
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி.,க்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்