3, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு... பயிற்சி; 9 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் வரும் 23ம் தேதி துவக்கம்

விழுப்புரம்: மறைந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில், கல்வித்துறை அனுமதியுடன் 9 ஒன்றியங்களில் வரும் 23ம் தேதி முதல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தற்போது குழந்தை முதல், சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் மொபைல் போனுக்கு அடிமையாகியுள்ளனர். மொபைல் போன்களில் கேம் விளையாடுவது, ரீல்ஸ் உள்ளிட்டவைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டில் ஆர்வம் குறைந்து போனது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தைத் துாண்டும் வகையில், விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் பயிற்சி மையம் சார்பில், அரசு பள்ளிகளில் 'ஓடி விளையாடு உடற்கல்வி பயிற்சி' திட்டம் கடந்த ஆண்டு நவம்ப மாதம் 10ம் தேதி துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், தனியார் பயிற்சி மையம் சார்பில் ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிளில் 3, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்லர் கம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ், சிலம்பம், யோகா, கபடி, கோ கோ, தடகள பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி மையம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வித் துறை அதிகாரபூர்வமான அனுமதியை வழங்கியுள்ளது.

கோலியனுார் ஒன்றியத்தில் பானாம்பட்டு, நரையூர், சாலையாம்பாளையம், பில்லுார், பிடாகம், கண்டம்பாக்கம், கப்பூர், வழுதரெட்டி, சிறுவாக்கூர் ஆகிய அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டு முதல் இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் சாமிப்பேட்டை, எம்.பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம், அரசமங்கலம், பில்லுார், ஆனாங்கூர், எம்.குச்சிப்பாளையம், கோலியனுார், பானாம்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிற்சி அளிக்க கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, இப்பள்ளிகளில் வரும் 23ம் தேதி முதல் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பள்ளி வேலை நேரங்களில் ஒரு படவேளையில், மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஐந்தில் வளையாதது, 50ல் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, விளையாட்டு பயிற்சி பெறுவதற்கு சிறுவர்களுக்கு உடல் வளையக் கூடியதாக இருக்கும்.

மேலும், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு படிப்பு சுமை குறைவு. இதனால், துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு கற்றுத்தரப்படுவதாக பயிற்சியாளர்கள் கூறினர்.

Advertisement