'கிளி ஜோசியம் பார்த்தேன்; பா.ம.க.,வில் குழப்பம் தீரும்'

1

சேலம் : சேலத்தில், பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் அளித்த பேட்டி:


பா.ம.க.,வில் நிலவும் தந்தை, மகன் பிரச்னை, எதிர்பாராத ஒன்று. இதே மாதிரியான பிரச்னைகள் தலையெடுப்பதும் பின் இருதரப்பும் சமாதானமாகி மறைவதும், எல்லா குடும்பங்களிலும் உள்ள பிரச்னைதான். ஒரு மாதத்தில் இந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு வரும் என நினைக்கிறேன்.


குடும்பத்தில் நிலவும் சிறு பிரச்னையை, ஊடகங்கள், மற்றவர்கள் பெரிதாக்கக்கூடாது. சாதாரணமான இந்த பிரச்னை தீர, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.



இந்த குழப்பத்தை பயன்படுத்தி, சில எதிர்க்கட்சிகள் குளிர்காய பார்க்கின்றன. அது நிறைவேறாது. 2026ல், பா.ம.க.,வை தவிர்த்துவிட்டு, எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. கட்சியிலும் தந்தை, மகன் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, கிளி ஜோசியம், ஜாதகம் பார்த்தேன். இன்னும் ஒரு மாதத்தில் குழப்பம் சரியாகிவிடும் எனக் கூறி உள்ளனர்.


தந்தையர் தினத்தில், அன்புமணி, அவரது தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதனால், பிரச்னை இனி இழுக்காது; விரைவில் தீர்வு ஏற்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement