ரேஷன் கடைக்கு முழு நேர ஊழியர் நியமனம்: கூட்டுறவு அதிகாரி உறுதி

அனுப்பர்பாளையம்: கோரிக்கைகளை வலியுறுத்தி 15 வேலம்பாளையம் நகர மா.கம்யூ கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் அனுப்பர்பாளையம் ரேஷன் கடை முன் நடைபெற்றது.

நகர குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். நகர செயலாளர் நந்தகோபால், நகர குழு உறுப்பினர்கள் சுகுமார், சின்னசாமி, விஸ்வநாதன், மாதர் சங்க கிளை செயலாளர் சாந்தி, சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் ஆறுமுகம், குபேந்திரன் மற்றும் பொது மக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திலகர் நகர், அனுப்பர்பாளையம் புதுார், சிறுபூலுவப்பட்டி ஆகிய ரேஷன் கடைகளில் ஆயிரக்கணக்கான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது.

பொதுமக்கள் பொருட்கள் வாங்க மாதத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்து கொண்டு பொருட்கள் வாங்க செல்ல வேண்டி உள்ளது. கடைக்கு முழு நேர பணியாளர்களை நியமித்து, அனைத்து நாட்களும், அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என கோஷமிடப்பட்டது.

ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு வந்த வளர்மதி கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர் புவனேஸ்வரி, 'முழு நேர பணியாளர் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி கூறினார்.

Advertisement