உயர்கல்வித் துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு

புதுச்சேரி : 'உயர்கல்வித் துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், லாஸ்பேட்டை உயர்கல்வித்துறை அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கல்வித் துறை செயலர் பிரியதர்ஷினி, உயர்கல்வித் துறை இயக்குநர் அமன் சர்மா, உயர் கல்வித்துறை துணை வேந்தர் மற்றும் பேராசிரியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உயர் கல்வித்துறையில் உள்ள காலி பணியிடங்கள், சட்டசபையில் உயர்கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள், அதில் நிறைவேற்றப்பட்டவை, கிடப்பில் உள்ள திட்டங்கள், பதவி உயர்வு, கல்லுாரிகளில் நடந்து வரும் புதிய கட்டடங்கள் கட்டும் பணியின் தற்போது நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் பயிற்சி மையங்கள், தொழில்நுட்ப உள் கட்டமைப்புகளை அதிகரிக்கும் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், உயர்கல்வித்துறையில் நடந்து வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், பதவி உயர்வுகளை காலத்தோடு வழங்கவும், சட்டசபை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement