இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

புதுடில்லி: வரும் ஜூன் 22ம் தேதி செல்ல இருந்த இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து, இப்பணியை செய்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர்.



இதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் வாயிலாக இன்று புறப்படுவர் என, 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனம் அறிவித்திருந்தது.


கடந்த மாதம் 29ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், அப்பயணம் கடந்த 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது. எனினும், மோசமான வானிலை காரணமாக அத்திட்டமும் தள்ளிப்போனது. இதேபோல், கடந்த 11ம் தேதி ஏவ திட்டமிட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இதையடுத்து, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் வரும் ஜூன் 22ம் தேதி புறப்படுவர் என, 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது அதற்கும் தடைகள் வந்துள்ளது. வரும் ஜூன் 22ம் தேதி செல்ல இருந்த இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement