கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

ஒட்டாவா: கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சடலத்தை தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


டில்லியைச் சேர்ந்தவர் தன்யா தியாகி என்பவர் கனடாவில் உள்ள கார்கேரி பல்கலையில் உயர்கல்வி படித்து வந்ததார். இவர் கடந்த ஜூன் 17ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், இவரது மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரையில் தெரியவில்லை.


அதேவேளையில், எக்ஸ் தளத்தில் வழக்கறிஞர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; வடகிழக்கு டில்லியில் உள்ள விஜய் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் தன்யா தியாகி. இவர் கனடாவில் படித்து வந்தார். இவர் கடந்த 17ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். தன்யாவின் உடலை இந்தியா கொண்டு வர பிரதமர் மோடி உதவ வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.


இது குறித்து கனடாவுக்கான இந்திய தூதரகம் கூறியதாவது; கால்கேரி பல்கலையில் பயின்று வந்த இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் விதமாக, கனடா அதிகாரிகளுடனும், குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் டொமினிகன் குடியரசு நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளியான சுதிக்ஷா கோனன்கி, கடலில் குளிக்கச் சென்ற போது மாயமாகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement