அரிசியில் கிலோவிற்கு ரூ.7 கொள்ளை காங்., மாநில தலைவர் குற்றச்சாட்டு

புதுச்சேரி : மக்களுக்கு வழங்கப்படும் அரிசியில் கிலோவிற்கு 7 ரூபாய் கொள்ளை நடக்கிறது என, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டியுள்ளார்.

லாஸ்பேட்டையில் நடந்த காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அவர், பேசியதாவது:

கடந்த லோக்சபா தேர்தலில் காங்., வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் ரங்கசாமி அரிசியால் தான் நாம் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து, தற்போது அரிசி போட்டு வருகிறார்.

ஆனால், அந்த அரிசியை என்ன விலைக்கு வாங்குகிறார் என்று பார்த்தால், 47 ரூபாய்க்கு வாங்குகிறார். அதுவும் 4 மாதங்களுக்கு முன் டெண்டர் விட்டது. இன்று அரிசியின் விலை குறைந்து விட்டது.

மேலும், அவர்கள் கொடுக்கும் 10 கிலோ அரிசியை எடைபோட்டு பார்த்தால், 9 கிலோ தான் இருக்கும். அதிலும், 1 கிலோ கமிஷன் போய்விடுகிறது. அதாவது 47 ரூபாய் ஆட்டையைப்போட்டு விடுகின்றனர்.

ஒரு ஆளுக்கு 47 ரூபாய் ஆட்டையைப்போட்டு, முதல்வர் பங்கு போட்டு கொள்கிறார்.

30 ரூபாய்க்கு கிடைக்கும் அரிசியை மீண்டும் 47 ரூபாய்க்கு அவர்களிடையே வாங்குகின்றனர். ஏன் என்றால், அவர் தான் ஒழுங்காக பங்கு தருகிறார்.

அதனால், அவருக்கு இல்லை என, முதல்வரால் கூற முடியவில்லை. தற்போது அதிகபட்சம் 40 ரூபாய்க்கு மேல் போகாத அரிசியை 47 ரூபாய்க்கு வாங்கி கொடுக்கின்றனர். கண்ணுக்கு நேராக ஒரு கிலோவிற்கு 7 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர்.

முதல்வருக்கு அரிசி போட்டாலும் காசு, அரிசி போடவில்லை என்றாலும் காசு தான்' என்றார்.

Advertisement