இஸ்ரேல் மருத்துவமனை; ஈரான் அணு உலை சேதம் ஏழாவது நாளாக நீடிக்கும் தாக்குதல்

பெஹர்ஷெவா: இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் நேற்று குண்டு வீசி தாக்கியது. இதனால் கட்டடத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பதிலடியாக ஈரானின் அணு உலையை இஸ்ரேல் தாக்கியது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை ஓராண்டுக்குள் எட்ட உள்ளதாகவும், அது தங்கள் நாட்டை அழிக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் கூறி வந்தது.
இதற்கிடையே கடந்த வாரம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சு நடத்தி வந்தது. 'ஈரான் உடன்பாட்டை எட்டும் என்ற நம்பிக்கையில்லை' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
தாக்கம் அதிகம்
இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது என்ற முடிவுக்கு இஸ்ரேல் வந்தது. மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13ம் தேதி துவங்கிய மோதல், ஏழாவது நாளாக நேற்றும் நீடித்தது.
யாரும் எதிர்பாராத வகையில் ஈரானில் உள்ள அணு உலைகள், ஏவுகணை மையங்கள் மற்றும் ராணுவ தளபதிகள் துல்லியமாக இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். இதற்காக இஸ்ரேலுக்கு தண்டனை தருவோம் என, ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறினார். அதன்படி ஈரானும் பதில் தாக்குதலை துவக்கியது.
ஈரானில் 1,000 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியுள்ளது. அதேபோல் இஸ்ரேலின் மீது ஈரான் ஏவிய 400 ஏவுகணைகளில், 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மட்டுமே விழுந்துள்ளன.
ஆனால், அதுவே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் பல்வேறு நகரின் குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளன.
ஈரானை சரணடையும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இல்லையென்றால் கமேனி கொல்லப்பட வாய்ப்பு உள்ளது என்றும் மிரட்டல் விடுத்தார். இதற்கு பதில்அளித்த கமேனி, 'உங்கள் பூச்சாண்டிகளுக்கு பயப்படும் நாடுகளிடம் இதை சொல்லுங்கள். ஈரானிடம் உங்கள் மிரட்டல் எடுபடாது. போர் துவங்கியது' என, சவால் விட்டார்.
இந்நிலையில், தெற்கு இஸ்ரேலின் பெஹர்ஷெவாவில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணையை நேற்று வீசியது. இது, 1,000க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை.
நேற்றைய ஏவுகணை தாக்குதலின்போது மருத்துவமனையின் மேல் தளங்கள் மற்றும் பழைய அறுவை சிகிச்சை வார்டு கட்டடங்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்தனர்; உயிரிழப்புகள் ஏதுமில்லை. அனைவரும் பத்திரமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
இஸ்ரேலில் உள்ள பல மருத்துவமனைகள் கடந்த வாரத்தில் அவசரகால திட்டங்களை செயல்படுத்தின. அதன்படி, நிலத்தடி வாகன நிறுத்துமிடங்களை மருத்துவமனை தளங்களாக மாற்றினர். உடனடியாக வெளியேற்ற முடியாத நோயாளிகளான வென்டிலேட்டர்களில் இருப்பவர்களை அங்கு மாற்றினர்.
பழி தீர்ப்போம்
மருத்துவமனை மீதான தாக்குதலை போர் குற்றம் என இஸ்ரேல் கண்டித்தது. இதற்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இதையடுத்து ஈரானுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. அராக் பகுதியில் கனநீர் அணு உலையை தாக்கினர்.
இந்த உலை யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி, புளூட்டோனியத்தை உருவாக்கும் திறன் கொண்டது. புளூட்டோனியம், அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரானின் அரசு ஊடகம், கதிர்வீச்சு ஆபத்து எதுவும் இல்லை என கூறியது. அப்பகுதியை சுற்றி இருந்த பொது மக்கள் இஸ்ரேலின் எச்சரிக்கையால் முன்னதாகவே அப்புறப்படுத்தப்பட்டனர்.
உங்கள் சண்டையை நிறுத்துங்கள்!
ரஷ்ய அதிபர் புடின் உண்மையிலேயே சமாதான முயற்சியை முன்னெடுக்கிறார் என்றால், அதை முதலில் அவர் தன் நாட்டுக்கு செய்ய வேண்டும். உக்ரைனுடனான போரில் ரஷ்யாவை முதலில் சமாதானம் செய்யுங்கள். பின், இஸ்ரேல் - ஈரான் பிரச்னை குறித்து கவலைப்படலாம்.
--டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர்
உதவி செய்ய ரஷ்யா தயார்!
இஸ்ரேல் - ஈரான் மோதல் ஒரு நுட்பமான பிரச்னை. ஆனால் இதற்கு தீர்வு காண வாய்ப்பு உள்ளது. நாங்கள் யாருக்கும் எதையும் திணிக்கவில்லை; நிலைமையிலிருந்து வெளியேற ஒரு சாத்தியமான வழி உள்ளது என்பதை மட்டுமே பேசுகிறோம். முடிவு, இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களை சார்ந்தது.
-விளாடிமிர் புடின்
ரஷ்ய அதிபர்
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்