ரசாயன மருந்து பயன்பாட்டை விவசாயிகள் தவிர்க்க அறிவுறுத்தல்

தேனி: காய்கறிகள் சாகுபடியில் ரசாயன மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாற்றாக இயற்கை பூச்சி விரட்டிகள், வேப்பிலை கரைசலை பயன்படுத்த தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மாவட்டத்தில் சுமார் 9ஆயிரம் எக்டேருக்கு அதிகமாக காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, வெண்டை, முள்ளங்கி, சவ்சவ், பாகற்காய், மிளகாய், புடலை, பீர்கு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிர்கள் சாகுபடி செய்யும் போது பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் சிலர் வீரியம் அதிகம் உள்ள பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் அறுவடை நேரத்தில் நேரடியாகவும், அதனை சாப்பிடுபவர்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ரசாயன மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி தோட்டக்கலை, வேளாண்துறை சார்பில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'விவசாயிகள் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக வேப்பிலை கரைசல், வேப்பங்கொட்டை சாறு, வேப்ப எண்ணெய், மீன் அமிலம், உயர் பூச்சி விரட்டிகள், இனக்கவர்ச்சி பொறிகள் பயன்படுத்த வேண்டும். கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மருந்து விற்பனையாளர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளோம்,' என்றனர்.

Advertisement