போலீஸ் செய்தி...

வரதட்சணை கொடுமை: 7 பேர் மீது வழக்கு

போடி: அருகே தர்மத்துப்பட்டி கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி 26 . இவருக்கும் திண்டுக்கல் அருகே குரும்பபட்டியை சேர்ந்த முத்துமாரிஸ் 31,க்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரியதர்ஷினிக்கு வரதட்சணையாக பெற்றோர் 145 பவுன் நகை, ரூ. 5 லட்சம், 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொடுத்து உள்ளனர். சில நாட்களில் நகைகளை முத்துமாரிஸ் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டதாகவும், மாமனார் முருகேசன், மாமியார் ராஜாத்தி இருவரும் பிரியதர்ஷினியை கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் பிரச்சனை செய்துள்ளதாகவும், உறவினரான ஜெயராணி, பாமா, காயத்ரி, ரத்தினம் ஆகியோர் தூண்டுதலின் பேரில் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம், 50 பவுன் நகை கேட்டு அனைவரும் துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரியதர்ஷினி போலீசில் புகார் செய்தார். கணவர், மாமனார், மாமியார் உட்பட 7 பேர் மீது போடி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முதியவர் தற்கொலை

போடி: சீனிவாசா நகரில் வசிப்பவர் சாந்தி 58. இவரது கணவர் பாப்பா கண்ணன் 65, இவரது மகள் காந்திமதி ஐஸ்வர்யா விற்கு திருமணம் செய்ததில் குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பாப்பா கண்ணன் தூக்கம் வராததால் 6 மாதமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். 10 நாட்களுக்கு முன்பு கூடுதலான தூக்க மாத்திரை சாப்பிட்டு உள்ளார். மயக்கம் அடைந்த பாப்பா கண்ணனை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

தேனி: கம்பம் தெற்கு போலீசார் கூடலுார் ரோட்டில் கடந்த மாதம் ரோந்து சென்ற போது ஏகலுத்து பிரிவில் சந்தேகப்படும்படி நின்றிருந்தோரை விசாரித்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1.250 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். உத்தமபாளையம் கோம்பை ரோடு ரத்தின குமார் 43, அதே பகுதியை சேர்ந்த ராமு, சின்னமனுார் சுபாஷ் சந்திர போஸ், தேனி சிவாஜிநகர் பிரியங்கா ஆகியோரை கைது செய்தனர். எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையில் ரத்தினகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார். இந்த உத்தரவு தேக்கம்பட்டி சிறையில் இருந்த ரத்தினகுமாரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

குழந்தையுடன் பெண் மாயம்

ஆண்டிபட்டி: உத்தமபாளையம் சுருளிபட்டியை சேர்ந்தவர் கணேசன் 50, இவரது மகள் சிவநதி 25, இவருக்கும் வருஷநாட்டைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்கும் திருமணம் முடிந்து மாயன் 4, என்ற குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிவநதி தன் தந்தை வீட்டில் இருந்துள்ளார். ஜூன் 12ல் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஜெயராம் தன்னிடம் இருந்த குழந்தை மாயனை சிவநதியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கிருந்து சென்ற சிவநதி, மாயன் இருவரும் மீண்டும் ஊருக்கு செல்லவில்லை. எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சிவநதியின் தந்தை கணேசன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

காதணி விழாவில் தகராறு, கத்திக்குத்து

பெரியகுளம்: உத்தமபாளையம் அருகே சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் 56. இவர் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் உறவினர் காளிமுத்து வீட்டு காதணிவிழாவிற்கு வந்துள்ளார். சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த சுப்புராஜ் இவரது மகன்கள் அஜித்குமார், சரவணக்குமார், மனைவி லட்சுமி ஆகியோரும் காதணி விழாவிற்கு வந்துள்ளனர். மாரியப்பன் அண்ணன் மகளை சரவணக்குமார் திருமணம் செய்துள்ளார். தற்போது விவகாரத்து பிரச்னை இருந்து வருகிறது. இதனால் மாரியப்பனுக்கும், சுப்புராஜிற்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் மாரியப்பனை, சுப்புராஜ் உட்பட 4 பேர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீசார் சுப்புராஜ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கணவன், மனைவி மீது வழக்கு

போடி: எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் கணேசன் மனைவி முத்துப் பாண்டியம்மாள் 28. திருமணத்தின் போது முத்துப் பாண்டியம்மாளுக்கு 17 பவுன் நகை, ரூ.12 லட்சம் பெற்றோர் கொடுத்துள்ளனர். இந்த நகை மற்றும் பணத்தை திரும்ப தருவதாக கூறி 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்துப் பாண்டியம்மாளின் நாத்தனார் கவிதா, இவரது கணவர் திசைகரன் வாங்கி உள்ளனர். கொடுத்த பணம், நகைகளை முத்துப் பாண்டியம்மாள் திரும்ப கேட்டுள்ளார். தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். முத்துப்பாண்டியம்மாள் புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் கவிதா, திசைகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement