சாலையோர கடையில் 'மினி' பஸ் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மினி பஸ் சாலையோர கடையில் மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ் ஒன்று, 18 பயணிகளை ஏற்றிக் கொண்டு பைத்தந்துரை பகுதியை நோக்கி, நேற்று முன்தினம் மாலை 5:௦௦ மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை நமச்சிவாயபுரத்தை சேர்ந்த தம்பிதுரை என்பவர் ஓட்டி சென்றார்.

கள்ளக்குறிச்சி நகராட்சி துவக்கப்பள்ளி அருகே உள்ள வளைவில் பஸ் திரும்பியபோது அந்த வழியாக வந்த குதிரைச்சந்தல் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் மணி,25; என்பவர் ஓட்டி வந்த பைக் மீது 'மினி' பஸ் மோதியது.

தொடர்ந்து டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர கடையின் முன் பகுதியில் மோதி நின்றது. இதில் பஸ்சில் பயணித்த பயணிகள் சிலருக்கும், பைக்கில் சென்ற மணிக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement