இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு பயிற்சி

சங்கராபுரம்: கல்வராயன்மலை விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

சங்கராபுரம், வட்டார வேளாண்மை துறை சார்பில், கல்வராயன்மலை, சேராப்பட்டு பகுதியில் பெரும்மாநத்தம் கிராமத்தில் தேசிய வேளாண்மை இயக்க திட்டத்தின் மூலம் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கி, திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார். கிளாக்காடு ஊராட்சி தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் வரவேற்றார்.

இயற்கை வேளாண்மை குறித்து துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் விளக்கமளித்தார். பயிற்சியில் இயற்கை முறையில் ஒவ்வொரு விவசாயிகளும், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் சாகுபடி செய்து மண் வளத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான உணவு உற்பத்தியை பெருக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் வல்லரசு, ராகவன், ஏழுமலை ஆகியோர் பங்கேற்றனர். உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Advertisement