பழனிசாமியை கேலி செய்து கார்ட்டூன்; தி.மு.க., தொழில்நுட்ப அணி மீது புகார்

2


கோவை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கேலி செய்து, சமூக வலைதளத்தில் கார்ட்டூன் பதிவிட்ட தி.மு.க., தொழில்நுட்ப அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை போலீஸ் கமிஷனரிடம், அ.தி.மு.க., தொழில்நுட்ப அணியினர் புகார் அளித்தனர்.

கடந்த 17ம் தேதி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்து, தி.மு.க., தொழில்நுட்ப அணியினர், ஒரு போஸ்டர் பதிவிட்டுள்ளனர்.



அதில் பழனிசாமி சட்டையின்றி படுத்திருப்பதுபோன்றும், அவரது பின்னால் ஒரு கழுதை நிற்பது போலும் சித்தரித்து, 'கீழடியாவது தாய்மடியாவது, நமக்கு எப்பவுமே டாடி மோடி மடி தான்' என்ற வாக்கியத்துடன் பதிவிட்டுள்ளனர்.


கீழடி தொடர்பாக வெளியிட்ட இந்த சர்ச்சை கார்ட்டூன், அ.தி.மு.க., மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க., தொழில்நுட்ப அணியினரும், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த நிலையில், கார்ட்டூன் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., தொழில்நுட்ப அணியினர், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.


அ.தி.மு.க., தொழில்நுட்ப அணி மண்டல செயலர் விக்னேஷ் கூறுகையில், ''முன்னாள் முதல்வரான பழனிசாமியை தவறாக சித்தரித்து, சமூக வலைதளத்தில், அருவருக்கத்தக்க வகையில் கார்ட்டூன் வெளியிட்டுள்ளனர்.


''தி.மு.க., தொழில்நுட்ப அணியினர் மீதும், அதன் மாநில செயலர் ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள பதிவை உடனடியான நீக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement