நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்களில் சிறிய அளவிலான, 250 கோழிகள் கொண்ட நாட்டு கோழிப் பண்ணை அலகுகள் அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதற்காக, 10 பயனாளிகள் தேர்வு செய்து, கலெக்டரின் ஒப்புதலுடன் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கு கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவினத்தில், 50 சதவீதம் மானியமாக, 1,65,625 ரூபாய் மாநில அரசால் வழங்கப்படும்.

மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.ஒவ்வொரு பயனளிக்கும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.

கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வரும் 20ம் தேதிக்குள் அதே கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement