அமராவதி ஆற்றில் சட்டவிரோத குவாரி; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சட்டவிரோத மணல் குவாரியை தடுக்க தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற கிளைக்கு ஒருவர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் பதிவாளர் (நீதித்துறை) தாக்கல் செய்த பொதுநல மனு: கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுக்கத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர், கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.



இதை தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு பொதுப்பணித்துறை முதன்மை செயலர், கனிமவளத்துறை கமிஷனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


கரூர் நதின் சூர்யா,'திருமாநிலையூர் மற்றும் 'லைட் ஹவுஸ்' பகுதி அமராவதி ஆற்றில்
கழிவுநீர் கலக்கிறது. தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என பொதுநல மனு செய்தார். தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement