கைலாசாவுக்கு பாஸ்போர்ட், விசா கோர்ட்டில் நித்யானந்தா தரப்பு பதில்

மதுரை : உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையை சேர்ந்த ஜெகதலப்பிரதாபன், 'மதுரை ஆதீனம் மடத்தின், 292வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்தார்.

'திருவண்ணாமலை மற்றும் பிடதியில் தியான பீடம் நடத்திய நித்யானந்தா, தன்னை மதுரை ஆதீனம் மடத்தின் 293வது மடாதிபதியாக, 2012ல் அறிவித்தார்; பின் மடத்திலிருந்து வெளியேறினார். மதுரை ஆதீனம் மடம் நிர்வாகத்திற்குள் நித்யானந்தா எவ்விதத்திலும் தலையீடு செய்யவும், அங்கு நுழையவும் தடை விதிக்க வேண்டும்' என, 2017ல் மனு செய்தார்.

அதை ஏற்ற தனி நீதிபதி, நித்யானந்தா நுழைய தடை விதித்தார்.

இதை எதிர்த்து நித்யானந்தா, 2018ல் மேல்முறையீடு செய்தார். இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.

நித்யானந்தா தரப்பில் ஆஜரான அர்ச்சனா கூறுகையில், “வழக்கில் வேறு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட அவகாசம் தேவை என, மனுதாரர் தரப்பில் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இரு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்,” என்றார்.

நீதிபதிகள், 'வழக்கு தாக்கல் செய்த மனுதாரர் நித்யானந்தா எங்கு உள்ளார்' என, கேள்வி எழுப்ப, அர்ச்சனா, “அவர் கைலாசாவில் உள்ளார்,” என்று பதிலளித்தார்.

அதற்கு, நீதிபதிகள், 'அது எங்குள்ளது' என, கேள்வி எழுப்பினர். 'கைலாசா, ஆஸ்திரேலியா அருகே உள்ளது. கைலாசாவை ஐ.நா., அங்கீகரித்துள்ளது. அங்கு செல்ல பாஸ்போர்ட், விசா வழங்கப்படுகிறது. அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்ய தயார்' என, அர்ச்சனா கூறினார்.

Advertisement