அரசு பள்ளிகளில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள, 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோத்தகிரி பகுதியில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், பங்கேற்ற, திட்ட இயக்குனர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ பேசியதாவது:

புவி வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு காரணமான 'கார்பன் டை ஆக்சைடு' வாயுவை காற்று மண்டலத்தில் கலக்காமல் பிடித்து வைக்கும் நிகழ்ச்சிக்கு, 'கார்பன் வரிசைப்படுத்துதல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

'காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு பிரித்து எடுத்தல்; தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலக்கும் முன்பே பிடித்து வைத்தல்; இயற்கை வழியில் தாவரங்கள் உட்கொள்வது, மண்ணில் கார்பன் டை ஆக்சைடு சேமித்து வைத்தல்,' என, மூன்று வழிகளில் செயல்படுகிறது.

இவ்வாறு பிரித்து எடுக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடை திரவமாக மாற்றி பூமியின் அடியில் சேமித்து வைக்கலாம். இதன் மூலம், மண் வளம் அதிகரிக்கும். காடுகளை வளர்ப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைக்கலாம்.

அமெரிக்காவில், ஒவ்வொருவரும் ஆண்டுக்கு, 14.2 டன் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு, 6.14 டன் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.

பொதுமக்கள் கார்களில் பயணிப்பதால்தான், 50 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. பல்வேறு காரணங்களால் வெளியாகும் கார்பனின் அளவை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து விழிப்புணர்வு பெறுவதுடன், மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement