உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வலிமை பெற வேண்டும்; மத்திய தொலைத்தொடர்பு துறை செயலர் மிட்டல் பேச்சு

சென்னை: “உலகில் நாம் வளர்ந்த நாடாக மாற, உள்நாட்டு தொழில்நுட்பங்களில் வலிமை பெற வேண்டும்,” என, மத்திய தொலைத்தொடர்பு துறை செயலர் நீரஜ் மிட்டல் பேசினார்.


சென்னை ஐ.ஐ.டி., மற்றும் தனியார் தொலைத்தொடர்பு மையங்கள் சார்பில் நடத்தப்படும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான மூன்று நாள் பயிற்சி முகாமை, சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில் நீரஜ் மிட்டல் நேற்று துவக்கி வைத்தார்.

பின், அவர் பேசியதாவது:



தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியான, டி.டி.டி.எப்., என்பதன் முதன்மை பணி, டி.ஓ.டி., தான்.


அதாவது, அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த உள்நாட்டு ஆராய்ச்சி மேம்பாடு. அதன் வாயிலாக, நாட்டின் தொலைதுாரம் மற்றும் கிராமப்புறங்களில், 'டிஜிட்டல்' சார்ந்த இடைவெளியை குறைத்து, தொலைத்தொடர்பை மேம்படுத்த வேண்டும்.



அதை நோக்கிய பயணத்தில், ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் துறையினரை ஒருங்கிணைக்க வேண்டியது முக்கியம்.


தொழில்நுட்ப உரிமை வழங்குவது, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, தொழில்நுட்ப கூட்டு கண்டுபிடிப்பு கலாசாரத்தை உருவாக்குவது, தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிப்பது, அறிவுசார் சொத்துரிமையை உருவாக்குவது குறித்து விளக்கவும், விவாதிக்கவும், இந்த பயிற்சி முகாம் வாயிலாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.,க்கு, தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிதியாக, 500 கோடி ரூபாய் நிதியில், 120 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



மேலும், நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்கள், தொடக்க தயாரிப்பு நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு, 187 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நிதியுதவி பெற்ற அமைப்புகள், நிறுவனங்களின் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி சார்ந்த பயனுள்ள விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது.

நம் அண்டை நாடான சீனா, தொழில்நுட்பம் சார்ந்து இதைச் செய்துள்ளது; அதைச் செய்துள்ளது என, செய்தித்தாள்களில் படிக்கிறோம். நாம் ஏன் செய்யவில்லை அல்லது நாம் ஏன் செய்யக்கூடாது என்ற கேள்விகளை, தொழில்நுட்ப துறை சார்ந்த நாம் கேட்டால் தான் தீர்வு கிடைக்கும்.



பிரதமர் மோடி, 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். நாட்டின் வளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் நாம் வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசியதாவது:



சென்னை ஐ.ஐ.டி.,யில், தொலைத்தொடர்பு துறையின் அடுத்த கட்டமான, '6ஜி' சேவைக்கு அடித்தளமிடும் வகையில், 'ஆப்டிகல் கம்யூனிகேஷன்' உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், எஸ்.டி.எல்., டெக்னாலஜிஸ் உடன் இணைந்து, 4.07 கி.மீ., தரை வழியாகவும், 1.20 கி.மீ., வான் வழியாகவும் கேபிள்களை செலுத்தும், 'மல்டிகோர் பைப் டெஸ்ட் பெட்' அமைக்கப்பட்டுள்ளது.

'குவாண்டம்' தொழில்நுட்பங்களை தரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 'அக்னி கூல்' வாயிலாக செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் உருவாக்கும் தொழில்நுட்பமும், உரிமையும் எங்களிடம் உள்ளது.



செயற்கைக்கோள்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த நிலையான ஆய்வுகளை, சென்னை ஐ.ஐ.டி., செய்து வருகிறது. அவை அனைத்தும் வெற்றி பெற்றால், 6ஜி வாயிலாக, 100 கோடி மக்களை தொடர்பு எல்லைக்குள் இணைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில், மத்திய தொலைத்தொடர்பு துறை கூடுதல் செயலர்கள் குல்சார் நடராஜன், பராக் அகர்வால், ஐ.ஐ.டி., பேராசிரியர் காண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement