அன்புமணி கூட்டு பிரார்த்தனை எம்.எல்.ஏ.,க்கள் 'டிஸ்சார்ஜ்'

சேலம் : ''சில வாரங்களாக கட்சியில் சில குழப்பங்கள் நிலவுகின்றன. என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும், 100 சதவீதம் பொய். இன்னும் சில நாட்களில் தெளிவாக தெரியப்படுத்துவேன்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.

சேலத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட, பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்தி தலைமை வகித்தார். அதில், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:

பா.ம.க.,வின், எம்.எல்.ஏ.,க்கள், 2 பேர் உடல்நலமின்றி மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் உடல், மன ரீதியாக விரைவில் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம். சேலம் மாவட்டம், பா.ம.க.,வின் கோட்டை. வரலாற்றில் அதிக சட்டசபை இடங்களை தந்த இடம்.

தனியே போட்டியிட்டபோதும், 2 எம்.எல்.ஏ.,க்களை கொடுத்தது. ஒவ்வொரு முறை, இங்கு வந்து செல்லும்போது கூடுதல் தைரியம் கிடைக்கிறது.

கடந்த தேர்தலில் சேலத்தில், தி.மு.க., ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் ஒரு இடம் கூட, தி.மு.க., வெற்றி பெறக்கூடாது.

முன்னாள் முதல்வர், பழனிசாமி வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். ஒரு மாதத்துக்கு முன் வழங்கியிருந்தால், சட்ட சிக்கல் வந்திருக்காது.

அதற்கு பின் வந்த, தி.மு.க., உரிய வாதங்களை வைத்திருந்தால் இட ஒதுக்கீடு ரத்தாகி இருக்காது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என, உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும், முதல்வர் ஸ்டாலின், இன்னும் தரவில்லை. இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற தோற்றத்தை, முதல்வர் நிகழ்ச்சிகளில் பொய்யாக உருவாக்குகிறார்கள்.

டாஸ்மாக் விற்பனையில், 1,000 கோடி ரூபாய், வாகன இயக்கத்தில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. உள்ளே போனால், 50,000 கோடி ரூபாய் ஊழல் கண்டறிய முடியும்.

சில வாரங்களாக கட்சியில் என்னை வைத்து குழப்பங்கள் நிலவுகின்றன. என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும், 100 சதவீதம் பொய். இன்னும் சில நாட்களில் தெளிவாக தெரியப்படுத்துவேன்.

தலைவர் பொறுப்பு, பொதுக்குழுவில் தொண்டர்கள் கொடுத்தது. தற்போதைய குழப்பங்களை தைரியமாக எதிர்கொள்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை தவிர்ப்பதற்காக சேலம் மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களான அருள், ஜி.கே.மணி ஆகியோர் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் நெஞ்சுவலி எனக் கூறி அனுமதிக்கப்பட்டனர்.

சேலத்தில் அன்புமணி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை நிறைவு செய்த பின், இருவரும் டிஸ்சார்ஜ் ஆனதாக பா.ம.க., நிர்வாகிகள் கூறினர்.

Advertisement