ஆர்ப்பரித்த அதிரப்பள்ளி அருவி தொலைவில் இருந்து ரசிக்கலாம்

வால்பாறை : கேரளாவில் பெய்யும் கனமழையால், ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவியை சுற்றுலா பயணியர் கண்டுரசித்தனர்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை வழித்தடத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், இருமாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.

கேரளாவில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. இதனால், சுற்றுலா பயணியர் சாலக்குடி வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மேலாக இந்த தடை நீடிக்கிறது.

இந்நிலையில், கனமழையால், அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்து, மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை, தொலைவில் இருந்தபடி சுற்றுலா பயணியர் ரசித்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கேரளாவில் பருவமழை தீவிரமாக பெய்வதால், ஆறு மற்றும் அருவிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

'நீர்வீழ்ச்சியை ரோட்டில் நின்றபடி கண்டு ரசிக்கலாம். யாரும் அருகில் செல்லவோ, குளிக்கவோ கூடாது. நீர்வரத்து குறைந்த பின் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement