கலிபோர்னியாவில் தேசிய படைகள் குவிப்பு; டிரம்ப்புக்கு நீதிமன்றம் அனுமதி


கலிபோர்னியா: கலிபோர்னியாவில் தேசிய படைகளை குவித்த அதிபர் டிரம்ப் முடிவுக்கு அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை, அவரவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அதிகளவிலான மெக்சிகோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர்.


இதனிடையே, டிரம்ப்பின் நடவடிக்கையை கண்டித்து கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து, மெக்சிகோ, தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த தேசிய படையைச் சேர்ந்த 4000 வீரர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்ப வைத்தார். இதனால், கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் - அதிபர் டிரம்ப் இடையே மோதல் ஏற்பட்டது.


டிரம்ப்பின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது என்று வெளிப்படையாக விமர்சித்த கலிபோர்னியா கவர்னர் நியூசமை, கைது செய்யக் கூட உத்தரவிட நேரிடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்தில் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, கலிபோர்னியா கவர்னரை கலந்தாலோசிக்காமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்பட்டிருப்பது சட்டவிரோதம் என்று கூறி, தேசிய படைகளை குவித்த உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.


இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, லாஸ் ஏஞ்சலில் தேசிய படைகளை குவிக்கும் உத்தரவுக்கு அனுமதியளித்துள்ளார். உள்நாட்டு கலவரத்தை கட்டுப்படுத்த கூட்டாட்சி அதிகாரத்தை டிரம்ப் பயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement