ஏழைகள் கேள்வி கேட்பதை பா.ஜ., விரும்பவில்லை: ராகுல்

38


புதுடில்லி: ''ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, 'நம் நாட்டில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும். அப்படியான சமூகத்தின் உருவாக்கம் வெகுதொலைவில் இல்லை. மொழிகளை நம் கலாசாரத்தின் மீதான ஆபரணங்களாக கருதுகிறேன். நம் மொழிகள் இன்றி, நாம் உண்மையான இந்தியராக இருக்க முடியாது; தாய் மொழியே, நம் நாட்டின் அடையாளம் எனத் தெரிவித்து இருந்தார்.


இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆங்கிலம் தடையல்ல, அது அனைவரையும் இணைக்கும் பாலம்

ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல. அனைவருக்கும் அதிகாரம் அளிப்பது

ஆங்கிலம் என்பது சங்கிலி அல்ல. சங்கிலியை உடைக்கும் கருவி

ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை. இதனால், ஏழைகள் ஆங்கிலம் கற்பதை அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில், உங்கள் தாய்மொழியை போல் ஆங்கிலம் பேசுவதும் அத்தியாவசியம். அதன் மூலமே வேலை உறுதி செய்யப்படும். நம்பிக்கை அதிகரிக்கும்.


ஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஆன்மா, கலாசாரம் மற்றும் அறிவு உள்ளது. அவற்றை நாம் போற்ற வேண்டும். அதேநேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும்.
உலகத்துடன் போட்டி போடவும், அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பற்கான இந்தியாவை உருவாக்க இதுவே பாதை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement