இலவச வீட்டு மனை பட்டா எம்.எல்.ஏ., வழங்கல்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில் வருவாய்த்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பேரூராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அன்பு வரவேற்றார்.

கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து, பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் பொன்முடி எம்.எல்.ஏ., 75 பேருக்கு அரசின் இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணையை வழங்கி பேசினார்.

தொடர்ந்து முகையூரில் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 21.48 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் மேம்படுத்தும் பணியை பார்வையிட்டு, உறுதியாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார். மேலும், குளத்தைச் சுற்றி நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கவும் அறிவுறுத்தினர்.

வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement