போலி ஆவணங்கள் மூலம் 3 கோடி ரூபாய் மோசடி: யு.ஏ.இ.,யிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட முக்கிய குற்றவாளி

புதுடில்லி:3,66,73,000 ரூபாய் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உபவன் பவன் ஜெயின் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் குஜராத்தை சேர்ந்த உபவன் பவன் ஜெயின், ரியல் எஸ்டேட் முகவராக இருந்து, குறிப்பிட்ட சிலருடன் சேர்ந்து, 4 வெவ்வேறு சொத்துக்களைக் காட்டி, உண்மையான சொத்து உரிமையாளர்கள் போல, போலி அடையாள ஆவணங்களை உருவாக்கி, வங்கி கணக்கை துவக்கி ரூ.3,66,73,000 கோடி மோசடி செய்ததாக, சூரத்தில் உள்ள அதாஜன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரில் ஆள்மாறாட்டம், குற்றவியல் சதி, நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்க தூண்டுதல் மற்றும் மதிப்புமிக்க பாதுகாப்பை மோசடி செய்தல் ஆகியவை அடங்கும்.

சி.பி.ஐ., அறிக்கை:

தேடப்படும் குற்றவாளியான உபவன் பவன் ஜெயின் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு தப்பிச்சென்றார். இந்நிலையில் நாங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினோம். எங்களது கோரிக்கை அடிப்படையில், இன்டர்போல் மூலம் உபவன் பவனுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இன்டர்போல் வெளியிட்ட சிவப்பு அறிவிப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன.

இதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உபவன் பவன் ஜெயின் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இந்திய அரசின் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் வழியாக நாடுகடத்தல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தேடப்படும் குற்றவாளியான ஜெயின், துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் நேற்று இந்தியாவுக்குத் திரும்பினார்.

உபவன் பவன் ஜெயினை, இன்டர்போல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சட்ட அமலாக்க அதிகாரிகளின் உதவியுடன் வெற்றிகரமாக மீட்டுள்ளோம்.

இவ்வாறு சி.பி.ஐ., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement