ஈரானில் இருந்து இந்தியர்கள் 310 பேர் டில்லி வந்தனர்; இதுவரை 827 பேர் மீட்பு!

1

புதுடில்லி: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் மோதலுக்கு மத்தியில், இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதுவரை இந்தியர்கள் 827 பேர் டில்லி வந்தடைந்துள்ளனர்.



ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இச்சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.


இந்நிலையில், இன்று (ஜூன் 21) மாலை ஈரானில் இருந்து விமானம் 310 இந்தியர்களுடன் புதுடில்லியில் தரையிறங்கியது. இதன் மூலம், மொத்தம் 827 இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெஸ்வால் தெரிவித்துள்ளார்.


ஈரானில் இருந்து இந்தியா திரும்பிய, தம்பதியினர் கூறியதாவது: மத்திய அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். ஈரானில் இருந்து பத்திரமாக இந்தியா வந்தடைந்துள்ளோம்.


எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் தூதரக அதிகாரிகள் சிறப்பான முறையில் செய்து கொடுத்தனர். தங்குமிடம் ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.

Advertisement