மரணத்திற்கு பிறகு யாருக்கு தலைமை பொறுப்பு: 3 பேரை பரிந்துரைத்த அயதுல்லா கமேனி

16

டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான போரில் தான் கொல்லப்பட்டால், தலைமைப்பொறுப்புக்கு யார் வரவேண்டும் என்று 3 பேரை ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியதை அடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரான் ஆட்சியாளரும் மதத் தலைவருமான அயத்துல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.

இது தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தியில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கிடையே தற்போது போர் அதிகரித்து வரும் நிலையில், இந்த போரில் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக களம் இறங்கும் சாத்தியக்கூறுகள் எழும் நிலையில் அதற்கு ஈரான் அதிகாரிகளும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலையில் போர் தொடரும் போது, ஈரானின் தலைவர் கமேனிக்குப் பிறகு யார் பதவிக்கு வருவார் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தூதர்களால் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளன.

இதனிடையே பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனக்குப் பிறகு நாட்டை வழிநடத்தக்கூடிய 3 பேர் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.
எனினும், இந்தப் பட்டியலில் அவரது மகன் மொஜ்தபா பெயர் இடம்பெறவில்லை. இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தன்னைக் கொல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அறிந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணமாக, மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் தொலைபேசிகள் அல்லது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது உட்பட கடுமையான நடவடிக்கைகளை ஈரானிய புலனாய்வு அமைச்சகம் அமல்படுத்தி உள்ளது.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement