வருத்தம், சங்கடம் இருந்தாலும் தி.மு.க. கூட்டணியில் தொடருவோம்; துரை வைகோ

சென்னை: தி.மு.க., கூட்டணியில் வருத்தம், சங்கடம் இருந்தாலும் அதில் தொடருவோம் என்று ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வைகோ கூறி உள்ளார்.
ம.தி.மு.க.,வின் பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நாளை (ஜூன் 22) நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 1700 பேர் கலந்து கொள்ள உள்ளனர். பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இன்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
7 ஆண்டுகள் முடிந்து 8வது ஆண்டாக தி.மு.க., கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். கூட்டணி என்னும் போது ஒரு பொதுவான நோக்கம் இருக்கும். அதனால் தான் கூட்டணியில் கட்சிகள் சேருகின்றன. நாங்களும் அதே அடிப்படையில் மதவாதத்தை எதிர்க்கும் நோக்கத்தில் அணியில் இணைந்துள்ளோம்.
அந்த கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். கூட்டணியில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் எல்லாருக்கும் திருப்தியாக இருக்குமா என்றால் இருக்காது.
எங்கள் இயக்கம் மட்டுமல்ல, பிற இயக்கங்களும் கேட்பது கிடைக்காது இருக்கலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு கூட்டணியில் பிளவு, இவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறக்கூடாது. பலமுறை இந்த கூட்டணியில் ம.தி.மு.க., தொடர்கிறது என்று சொல்லி இருக்கிறோம். தமிழகத்தை பொறுத்த வரை இண்டி. கூட்டணி வலுவாக இருக்கிறது.
ம.தி.மு.க.,வை பொறுத்தவரை, எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாருக்கும் அதிக சீட்டுகள் வரணும், குறைந்த பட்சம் 12 சீட்டுகளில் நின்றால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த ஆசை எங்களுக்கு இருக்கிறது.
ஆனால் ஒரு கூட்டணி ஏன்னும் போது, பல இயக்கங்கள் ஒன்று சேரும் போது அந்த கால கட்டத்தில் இருக்கும் நெருக்கடிகளில் எங்களுக்கு மட்டும் என்று இல்லை, கூட்டணி தலைமைக்கும் இருக்கிறது. பொதுவான நோக்கம், கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக சமரச நிலை ஏற்படும். பொதுக்குழுவில் எங்கள் கருத்துகளை சொல்வோம். தலைமை பின்னர் முடிவெடுக்கும்.
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இந்த கூட்டணியில் ஏதேனும் விரிசல் விழாதா என்று எதிர்பார்க்கின்றனர். ஒரு தேர்தல் களத்தை பொறுத்த வரை, வலு பெறுவதும் எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்வதும் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு. கூட்டணியில் எங்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது, சங்கடங்கள் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் கூட்டணியில் தொடரும்.
3 முறை மத்திய அமைச்சர் வாய்ப்பு வந்த போதும் வேண்டாம் என்று சொன்னவர் வைகோ . ஆகையால் தி.மு.க., கூட்டணியில் ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணி மாறமாட்டோம். எனவே நாங்கள் கூட்டணியில் உறுதியாக உள்ளோம்.
குறைந்த தொகுதிகள் தந்தால் கூட்டணியில் இருப்பீர்களா? இல்லையா? என்று கேட்கலாம். எங்களை பொறுத்தவரைக்கும் ம.தி.மு.க., அந்த மாதிரி ஒரு நிலைப்பாடு எடுக்காது. நாங்கள் எதிர்பார்ப்பது தன்மானம், சுய மரியாதை. அதற்கு பாதகம் வந்துவிடக்கூடாது என்றுதான் எங்களின் விருப்பம்.
சீமானை பொறுத்தவரைக்கும் அவர் பேசுவதாக இருக்கட்டும், செய்வதாக இருக்கட்டும், வித்தியாசமாக செய்கிறார். ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டும்.
ஆட்சியில் பங்கு என்று சொல்வது பல குழப்பங்களை உருவாக்கும் என்று நான் சொல்வேன். அது ஒரு நல்ல விஷயம் தான். ஒவ்வொரு இயக்கத்துக்கும் குறைந்த பட்ச செயல்திட்டங்கள் என்பது இருக்கும். அதை நிறைவேற்ற, செயல்படுத்த ஆட்சியில் பங்கு என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த தருணத்தில் ஆட்சியில் பங்கு என்து பல குழப்பங்களை தரும் என்பது எனது அனுமானமாக இருக்கிறது.
ஆங்கிலம் இல்லாத ஒரு பாரதம் உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா கூறுவது சாத்தியமா என்று நான் கேட்கிறேன். பல்வேறு துறைகளில் நமது தமிழக மாணவர்கள் கோலோச்சுகின்றனர் என்றால் அதற்கு ஆங்கில மொழி புலமை தான் காரணம். இது எப்படி வந்தது என்றால் இருமொழிக் கொள்கையால் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு
-
"யோகா ஒரு பயிற்சி அல்ல - அது ஒரு வாழ்க்கை முறை."
-
மரணத்திற்கு பிறகு யாருக்கு தலைமை பொறுப்பு: 3 பேரை பரிந்துரைத்த அயதுல்லா கமேனி
-
எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,
-
திருச்சூரில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்கள் மீது மோதிய தனியார் பஸ்; பகீர் வீடியோ
-
ஈரானில் இருந்து இந்தியர்கள் 310 பேர் டில்லி வந்தனர்; இதுவரை 827 பேர் மீட்பு!