'பென்ஸ்' கார்களில் தீ பிடிக்கும் அபாயம்: 30 கார்களை திரும்ப பெற முடிவு

புதுடில்லி: 'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனத்தின் சொகுசு கார்களில் உள்ள, 'பியூஸ் பாக்ஸில்' ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுதும், 30 கார்களை திரும்ப பெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 'எஸ் - கிளாஸ் - ஜி.எல்.சி., - ஏ.எம்.ஜி., எஸ்.எல்., - 55 மற்றும் இ.க்யூ.எஸ்., செடான்' ஆகிய நான்கு மாடல் கார்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த குறைபாட்டால், கார் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. அதனால், இப்பிரச்னையை முன்கூட்டியே கண்டறிந்து தீர்வு காண, இந்நிறுவனம் முன்வந்துள்ளது. பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, 'பியூஸ் பாக்ஸ்' இலவசமாக மாற்றி கொடுப்பதாக இந்நிறுவனம் கூறி வருகிறது.

இந்த ஆண்டில், ஆறாவது முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். அமெரிக்காவில் கடந்த வாரத்தில் மட்டும், வேறு கோளாறு காரணமாக, 93,000 பென்ஸ் கார்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

Advertisement