அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்; அன்புமணி குற்றச்சாட்டு

3

சென்னை: அதிகாரம் இருக்கும் முதல்வர் தன்னிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். நமது எதிரி தி.மு.க., தான் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


சென்னை தி. நகரில் நடந்த நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாவது: ராமதாஸை பார்த்து வளர்ந்தவன் நான். என் மனதில் சமூகநீதி வெறி உள்ளது, அதற்கு அடித்தளம் அமைத்தவர் ராமதாஸ் தான்; பா.ம.க,வில் நிலவி வரும் எல்லா பிரச்னைகளும் விரைவில் சரியாகிவிடும். தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வன்னியர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தினோம் வன்னியர்களுக்கு நிச்சயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஸ்டாலின் எங்களிடம் முதலில் உறுதி அளித்தார்.

எதிரி தி.மு.க., தான்




பின்னர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு ஏன் தொந்தரவு செய்தீர்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். கடைசியாக சந்தித்தபோது பிரச்னை இருக்கிறது என்கிறார். அவர் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார். நமது எதிரி தி.மு.க., தான்; வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்குவேன் என்று துரோகம் செய்த முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

போராட்டம்




இட ஒதுக்கீட்டிற்காக மீண்டும் தமிழக அளவில் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
பா.ம.க.,விடம் தற்போது அதிகாரம் இல்லை. அதிகாரம் இருக்கும் முதல்வர் தன்னிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். கர்நாடகா, பீஹார், ஒடிசா போன்ற மாநில முதல்வர்கள் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் போது, தமிழக முதல்வருக்கு மட்டும் எப்படி அந்த அதிகாரம் இல்லாமல் போகும்.


வேலைவாய்ப்பு





தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஓட்டு போட மட்டுமே பயன்படுத்தப் படுகிறார்கள். தமிழகத்தில் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலைவாய்ப்பு வேண்டும் அதற்கு முறையான கணக்கெடுப்பு வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

Advertisement