ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்

டெல் அவிவ்: ஈரான் மீதான தாக்குதலின் முக்கிய கட்டமாக அந்நாட்டில் உள்ள அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கி இருக்கிறது.
ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே நிகழ்ந்து வரும் போர், 2வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை ஒட்டு மொத்தமாக முடக்கும் நோக்கத்தில் அந்நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது.
அங்குள்ள ராணுவ நிலைகள், அணுசக்தி நிலையங்கள் மீதும் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதன் முக்கிய கட்டமாக ஈரானில் உள்ள இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு இருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரி கூறி உள்ளதாவது;
இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையம் இப்படித்தான் இருக்கிறது. இது யுரேனியத்தை மாற்றப் பயன்படுகிறது. அணு ஆயுதங்கள் இங்கு செறிவூட்டப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வான்வழியாக நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலில் அணுசக்தி நிலையம் சேதம் அடைந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து எவ்வித அணுக்கதிர்வீச்சு கசிவுகள் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈரானில் உள்ள நிலைகளை குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. தலைநகர் டெல் அவிவ் பகுதியில் உள்ள ஏராளமான கட்டடங்கள் பற்றி எரிகின்றன. இஸ்ரேலின் அதிரடி தாக்குதலுக்கு ஈரானும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இந்த அணுசக்தி நிலையம் அந்நாட்டின் முக்கிய தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


