சவுதியில் ஜவுளி கண்காட்சி ஆர்டர்களை கைப்பற்ற வாய்ப்பு

திருப்பூர்:சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள 'சவுதி பேஷன் அண்டு டெக்ஸ்' கண்காட்சி வாயிலாக, சீனாவுக்கு செல்லும் ஆர்டர்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., நம்பிக்கை தெரிவித்துஉள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியா, கடந்த ஆண்டில், 36,515 கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்துள்ளது. சீனா, 48.6 சதவீதம், நம் நாடு, 13.40 சதவீதம், வங்கதேசம் 8 சதவீதம் என்ற அளவில் சவுதிக்கு ஏற்றுமதி ஆகின்றன.

துருக்கி, இத்தாலி, ஹாங்ஹாங், வியட்நாம், பாகிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகளும், ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்து வருகின்றன.

பசுமை சார் உற்பத்தியில் நம் நாடு உயர்நிலை அடைந்துள்ளதால், சவுதி அரேபியாவில் இருந்து கூடுதல் ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கும் சூழல் நிலவுகிறது.

ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறுகையில், 'சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் உள்ள வர்த்தக மையத்தில், செப்., மாதம், 25ம் தேதி துவங்கி, நான்கு நாட்கள் 'சவுதி பேஷன் அண்டு டெக்ஸ்' கண்காட்சி நடைபெறுகிறது. இது, புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும்.

பசுமை சார் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக இருப்பதால், சீனாவுக்கு செல்லும் ஆர்டர்களை கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புள்ளது.

மத்திய அரசு மானிய உதவியுடன், கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள ஏற்றுமதியாளர்கள், வரும், 30ம் தேதிக்குள், www.aepcindia.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement