கிருஷ்ணசாமிக்கு அரிவாள் பார்சல்; விவசாயிகள் சங்கம் சவால்

4

பல்லடம்: ''அரிவாள் அனுப்பி வைக்கிறோம்; தைரியம் இருந்தால் பானைகளை உடைக்க இங்கு வாருங்கள்'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

இதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:



தமிழகத்தில், கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என, கடந்த, 38 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இச்சூழலில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வன்முறையை துாண்டும் விதமாக, கள் குறித்து தொடர்ந்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.



ஏற்கனவே இவரது கருத்துக்கு பதில் தெரிவித்திருந்த நிலையில், 'கள் விஷம்' என்றும்; 'தமிழகத்தில், எங்கு கள் இறக்கினாலும், 100 பேருடன் அரிவாளோடு வருவோம்' என்றும் விவசாயிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.


தென்னை, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நியாயமான போராட்டத்தை கிருஷ்ணசாமி தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை. இனியும் தொடர்ந்து இதேபோல் பேசி வந்தால், அவரை வீதியில் நடமாட விடமாட்டோம்.


அரசியல் விளம்பரம் தேட எத்தனையோ வழிமுறை உள்ளது. திராணி இருந்தால், ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன் என்று கூறிய தி.மு.க., அரசை எதிர்த்துப் போராடட்டும். கிருஷ்ணசாமிக்கு, அரிவாளை பார்சலில் அனுப்பி வைக்கிறோம்; தைரியம் இருந்தால், இங்குள்ள விவசாயிகளின் தோட்டத்துக்கு பானையை உடைக்க வரட்டும் என சவால் விடுகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement