டில்லி உஷ்ஷ்ஷ்: யார் அந்த அமைச்சர்?

புதுடில்லி: தமிழக அரசியல் குடும்பத்தில், அண்ணன் --- தம்பிக்கு இடையே உள்ள பிரச்னை, இப்போது சந்திக்கு வந்துவிட்டது. இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதும், டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 'தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த சொத்து பிரச்னை, தி.மு.க.,வை பாதிக்குமா?' என்ற கேள்வி, டில்லி அரசியல்வாதிகள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.

இதற்கிடையே வேறொரு விஷயமும் டில்லியில் பேசப்படுகிறது. ஒரு சீனியர் தமிழக அமைச்சர், டில்லியில் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே நட்பாக இருப்பவர்; எப்போது டில்லி வந்தாலும், நண்பர்களை சந்திக்காமல் சென்னை திரும்பமாட்டார்; தன் நண்பர்களுக்கு அடிக்கடி, 'வாட்ஸாப்' மெசேஜ் அனுப்பி, தொடர்பில் இருப்பவர்.

இந்த சகோதர மோதல் செய்தி வெளியான உடனேயே, தன் டில்லி நண்பருக்கு, 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்பினாராம் அமைச்சர். இந்த செய்தியைக் குறிப்பிட்டு, இரண்டே வார்த்தைகள்தான் அந்த மெசேஜில் இருந்ததாம். 'ஹா... ஹா...' என ஆங்கிலத்தில், குறிப்பிட்டிருந்தாராம். 'எதைச் சொல்ல வருகிறார் அமைச்சர்?' என, யாருக்கு அந்த மெசேஜ் வந்ததோ அவர் குழம்பிவிட்டாராம்.

இத்துடன், இன்னொரு மெசேஜும் அனுப்பினாராம் அமைச்சர். ஏற்கனவே தன் பேச்சால், கட்சி தலைமையை அதிர வைத்த அந்த அமைச்சர், தீவிர அரசியலிலிருந்து தான் விலகப் போவதாகவும் சொல்லி உள்ளாராம். 'யார் அந்த அமைச்சர்? அவர் யாருக்கு மெசேஜ் அனுப்பினார்?' என, டில்லி அரசியல் வட்டாரங்கள் புலனாய்வு செய்து வருகின்றன.

Advertisement