பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி

இன்றைய நவீனகாலத்தில் அனைத்தும் மொபைல் போன் மயமாகி விட்டது. பள்ளி படிக்கும் மாணவ - மாணவியர் கூட மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டனர். எப்போது பள்ளி முடியும்; வீட்டிற்கு சென்று மொபைல் போனில் 'கேம்' விளையாடலாம் என்று நினைக்கின்றனர்.

ஒரு சிலர் மட்டுமே மொபைல் போன்களை ஒதுக்கிவைத்து விட்டு, புத்தகம் படிப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். பள்ளி நேரம் முடிந்ததும் அரசு பள்ளி மாணவ - மாணவியர் விவசாயம் செய்யும் ஒரு இடம் உள்ளது.

மைசூரின் ஹுன்சூர் தாலுகா தேவஹள்ளி கிராமத்தில் அரசு உயர் நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர் மாலையில் பள்ளி முடிந்ததும், பள்ளியின் மைதானத்தில் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்திரிக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை உள்ளிட்ட காய்கறிகளையும், தினை, மருத்துவ தாவரங்களையும் வளர்க்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

சுற்றுச்சூழல், விவசாயத்தை பாதுகாப்பது பற்றி புத்தகத்தில் உள்ளதை வைத்து மாணவ - மாணவியருக்கு பாடம் எடுத்து விடுகிறோம்.

அவர்கள் பாடத்தில் மட்டும் படித்தால் போதாது. நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல், விவசாயத்தை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதன் ஒரு முயற்சியாக மாலையில் பள்ளி முடிந்ததும், பள்ளி மைதானத்தில் விவசாயம் செய்ய சொல்லி கொடுக்கிறோம். அவர்களும் ஆர்வமாக வந்து விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

தாங்கள் நட்டு வைத்த செடிகளை, குழந்தைகள் போன்று பராமரிக்கின்றனர். மாணவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளில், மதிய உணவு செய்கிறோம். தங்களால் விளைவிக்கப்பட்டு அதில் கிடைக்கும் காய்கறிகளை சாப்பிடுவதால், அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த முயற்சிக்கு பெற்றோரும் ஊக்கம் அளிக்கின்றனர். அவர்களும் இங்கு வந்து உதவி செய்கின்றனர். மொபைல் போனை பார்த்து நேரத்தை வீணடிப்பதை விட, விவசாயத்தில் ஆர்வம் காட்டினால் மாணவ, மாணவியருக்கு புதிய அனுபவம் கிடைக்கும்.


இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்

- நமது நிருபர் -.

Advertisement