கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி

பெலகாவி: கர்நாடகாவின் நான்கு மாவட்டங்களில் உள்ள 814 கிராமங்களை தங்கள் மாநிலத்துடன் இணைப்பதற்கும், இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்னை குறித்து பேச்சு நடத்தவும் தன் தலைமையில் குழுவை மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அமைத்துள்ளார். இந்த குழுவில் துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், மூத்த அரசியல் தலைவர் சரத் பவார் உட்பட 18 பேர் இடம் பிடித்துள்ளனர்.

கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநிலங்களில் இடையே, 1956ம் ஆண்டு முதல் எல்லை பிரச்னை உள்ளது. இரு மாநிலங்களின் எல்லையில் மராத்தி மொழி பேசும் கிராமங்களை கர்நாடகாவுடன் இணைக்க மஹாராஷ்டிரா எதிர்ப்பு தெரிவித்தது.

இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவின் பெலகாவி, கலபுரகி, பீதர், விஜயபுரா ஆகிய நான்கு மாவட்டங்களில், மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் 814 கிராமங்களில் மஹாராஷ்டிரா அரசின் சுகாதார சேவையை செயல்படுத்தும் திட்டத்தை அறிவித்தார். இதற்கு கர்நாடகாவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

எல்லையோர மாவட்டங்கள் கர்நாடகாவுக்கு தான் சொந்தம் என்பதை, மஹாராஷ்டிராவுக்கு எடுத்துக்கூறும் வகையில், பெலகாவியில் சுவர்ண விதான் சவுதாவை கர்நாடக அரசு கட்டியது. இங்கு ஆண்டுதோறும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. இதற்கு பெலகாவியில் வசிக்கும் மராத்தியர்கள், எம்.இ.எஸ்., எனும் மராத்திய ஏக்கிரண் சமிதி என்ற கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சுவர்ண விதான் சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மராத்திய அமைப்புகள் ஊர்வலம் நடத்துவது ஆண்டுதோறும் வழக்கம். இரு மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது எல்லை பிரச்னை ஏற்படுவதும், இரு மாநில அரசு பஸ்கள் மீது கல்வீசுவது, கருப்பு மை பூசுவதும் நடக்கிறது.

இந்நிலையில், பெலகாவி, கலபுரகி, பீதர், விஜயபுரா ஆகிய கர்நாடக மாவட்டங்களில் உள்ள 814 கிராமங்களை, மஹாராஷ்ராவுடன் இணைப்பது பற்றியும், இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்னை குறித்து, கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தவும், மஹாராஷ்டிரா அரசு புதிய குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், ஷம்புராஜ் தேசாய், பிரகாஷ்ராவ் அபித்கர், முன்னாள் முதல்வர்கள் நாராயண் ரானே, சரத் பவார், பிரித்விராஜ் சவான், எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வின் சுதிர் காட்கில், சச்சின் கல்யாண் ஷெட்டி, சுரேஷ் காடே, தேசியவாத காங்கிரசின் ரோகித் பாட்டீல், ஜெயந்த் பாட்டீல் உட்பட 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

எல்லை பிரச்னை, இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது உட்பட, பல விஷயங்கள் குறித்து கர்நாடக அரசுடன் இக்குழுவினர் பேச்சு நடத்த உள்ளனர்.

மஹாராஷ்டிரா அரசு குழு அமைத்திருப்பதற்கு, கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளன. எல்லை பிரச்னையில் அரசு துடிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

மஹாராஷ்டிராவுடன் எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க, சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீலை தலைவராக நியமித்து ஒரு குழு அமைக்க வேண்டும் என, கன்னட அமைப்புகள், சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. ஆனால் அந்த கோரிக்கையின் மீது, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது மஹாராஷ்டிரா அரசு குழு அமைத்து இருப்பதால், கர்நாடகா சார்பிலும் குழு அமைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

Advertisement